புனே: கால்வாயில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கழிவு நீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்த இருவரை மீட்கப் போராடிய வீரர் உயிரிழந்தார்.


குழிக்குள் விழுந்தவர்களைக் காப்பாற்ற முடியாமல் இந்தியாவில் தொடர்ந்து உயிர்பலிகள் நடைபெற்றுவருகின்றன.


திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அதன்பின்னரும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து போதிய விழ்ப்புணர்வு இன்னும் எழவில்லை என்பதைத் தான் தற்போதுவரும் செய்திகள் நிரூபிக்கின்றன.

புனேவில் உள்ள தாபோடி பகுதியில் கழிவுநீர்க் கால்வாயில் நேற்று மாலை இரண்டுபேர் தவறி விழுந்தனர். 25 அடி ஆழமுள்ள சேறு நிறைந்த குழியில் விழுந்த அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது


தீயணைப்பு படைவீரர்கள் மூவர் இந்த மீட்புப்பணியில் ஈடுபட்ட போது அவர்களும் சேறில் சிக்கிக்கொண்டனர். பின்னர் அவர்களை மீட்க நடைபெற்ற முயற்சியில் இரவு 9 மணியளவில் சரோஜ் புண்டே, நிதின் கொகாவாலே ஆகியோர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். ஆனால் விஷால் ஜாதவ் என்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். குழிக்குள் சிக்கிய இரண்டுபேரை இன்னும் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது